நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதுதொடர்பாக, முதல்வருக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து, கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த நிலையில், நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நரிக்குறவர்கள், குருவிக்கார்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
எங்களின் தொடர் முயற்சியின் விளைவாக, நாடாளுமன்ற மக்களவையில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான வரலாற்று சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். நரிக்குறவர் சமூகத்தினரின் கண்ணியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.