ஆவின் பால், நெய் விலையை தொடர்ந்த தற்போது சமையல் பயன்பாட்டிற்கான வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. ஆரஞ்சு பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெய்யின் விலையும் லிட்டருக்கு ரூ.50 உயர்த்தி ஆவின் நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது.
அதன்படி, 15 லிட்டர் நெய் (டின்)- ரூ.10 ஆயிரத்து 725 (பழைய விலை ரூ.9,680); பிரீமியம் நெய் 1 லிட்டர்- ரூ.680 (ரூ.630); பிரீமியம் நெய் அரை லிட்டர்- ரூ.365 (ரூ.340). நெய் அரை லிட்டர்- ரூ.305 (ரூ.285); நெய் 100 மி.லி. (பவுச்)- ரூ.70 (ரூ.65); நெய் 100 மி.லி. (ஜார்)- ரூ.75 (ரூ.70); நெய் 15 மி.லி. (பவுச்)- ரூ.14 (ரூ.12); நெய் 1 லிட்டர் (அட்டைப்பெட்டி)- ரூ.620 (ரூ.575); நெய் அரை லிட்டர் (அட்டைப்பெட்டி)- ரூ.310 (ரூ.280). நெய் 1 லிட்டர் (ஜார்)- ரூ.630 (ரூ.580); நெய் அரை லிட்டர் (ஜார்)- ரூ.315 (ரூ.290); நெய் 200 மிலி. (ஜார்)- ரூ.145 (ரூ.130); நெய் 5 லிட்டர் (ஜார்)- ரூ.3,250 (ரூ.2,900) என்று விலை உயர்ந்துள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி லிட்டருக்கு 20 ரூபாயும், இதையடுத்து ஜூலை மாதம் 21-ம் தேதி 45 ரூபாய் என்ற அளவில் ஆவின் நெய்யின் விலை உயர்த்தப்பட்டது. தற்போது லிட்டருக்கு 50 ரூபாய் என்ற அளவில் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நெய் விலையைத் தொடர்ந்த தற்போது வெண்ணெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சமையல் பயன்பாட்டிற்கான உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் 52 ரூபாயில் இருந்து 55 ரூபாயாகவும், 500 கிராம் வெண்ணெய் 250 ரூபாயில் இருந்து 260 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.