அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோ நகரைச் சேர்ந்தவர் நரம்பியல் மருத்துவர் லோகேஷ் எஸ்.தண்ட்வாயா (55). இந்திய வம்சாவளியான இவர், கடந்த 2010 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில், முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
அதன் அடிப்படையில் அவர் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாய்) லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மைக்கேல் ட்ரோபாட் என்ற நபருக்குச் சொந்தமான மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்வதற்காக இந்த லஞ்சப் பணத்தை அவர் பெற்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு மைக்கேல் ட்ரோபாட் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிரூபனம் செய்யப்பட்டு அவருக்கு 63 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவர் லோகேஷ் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 60 மாதங்கள் (5 ஆண்டுகள்) சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.