மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இந்த 2 தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைத்திருந்தாலும், வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள்ள் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆலோசனை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
இன்று காலை கமல்ஹாசன் தலைமையில் சென்னை அண்ணாநகரில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுப்பது, கூட்டணி அமைப்பது உள்ளிட்டவை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய இந்த யாத்திரை 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார்.டெல்லியில் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.