ஹிஜாப் விவகாரம் தொடர்பாக ஈரானில் அரசுக்கு எதிராக கடந்த செப்டம்பர் மாதம் மாபெரும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ரகசிய விசாரணை நடத்தி ஈரான் அரசு கடுமையான தண்டனை விதித்து வருகிறது.
ஈரான் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தன. இந்நிலையில் ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தி, அரசு எதிராக வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
போதுமான ஆதாரங்கள் இல்லாமல் ஈரான் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் நடிகை தரானே அலிதூஸ்தி வீடியோ வெளியிட்டதாகக் கூறி அவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது.
நடிகை தரானே அலிதூஸ்தி ஈரானின் மிகப் பிரபலமான நடிகை. அவர் நடித்த ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படம் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.
இவர் ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாத ஒரு பெண்ணை போலீசார் தாக்கியது குறித்து டுவிட்டரில் கண்டனம் தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in