தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரே, தனது இரண்டரை மாத கைக்குழந்தையுடன் சட்டசபைக்கு வருகை தந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் 2-வது தலைநகராக கருதப்படும் நாக்பூரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நாக்பூரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த தியோலாலி தொகுதி பெண் எம்.எல்.ஏ சரோஜ் பாபுலால் அஹிரே, தனது இரண்டரை மாத கைக்குழந்தையுடன் வந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ சரோஜ் பாபுலால் அஹிரேவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி குழந்தை பிறந்தது.

சட்டசபைக்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் எம்எல்ஏவை அங்கிருந்தவர்கள் ஆர்வமாக பார்த்துச் சென்றனர். இது குறித்து எம்எல்ஏ சரோஜ் பாபுலால் அஹிரே கூறுகையில், “கொரோனா காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாக்பூரில் எந்த கூட்டத்தொடரும் நடைபெறவில்லை. தற்போது நான் தாயாகி உள்ளேன். ஆனால் எனது தொகுதி மக்களுக்கு பதில் பெற நான் இங்கு வந்துள்ளேன்” என்றார்.