துணைக்கு யாரும் இல்லாமல் கவிஞர் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என, நடிகை அர்ச்சனாவின் புகைப்பட பதிவுக்கு, பிரபல பாடகி சின்மயி எச்சரித்து பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் பிரபல பாடகி சின்மயி. இவர், சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டு’ பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துடன், வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர் மீது குற்றம் சாட்டினார்.
மேலும், கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சின்மயி, கவிஞர் வைரமுத்துவை சந்தித்த தொலைக்காட்சி நடிகையை எச்சரித்து பதிவி ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா சில தினங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்துவை சந்தித்துள்ளார். அப்போது அவர் வைரமுத்துவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், வைரமுத்து அர்ச்சனாவின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்வது போன்ற புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.
இந்நிலையில், நடிகை அர்ச்சனாவின் புகைப்பட பதிவுக்கு கமென்ட் செய்துள்ள பாடகி சின்மயி, “துணைக்கு யாரும் இல்லாமல் கவிஞர் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம்” என எச்சரித்து பதிவிட்டுள்ளார். பாடகி சின்மயி பதிவிட்ட இந்த கமென்ட் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.