விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ரோஜா, அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசா அணியும் முதல் பரிசை வென்றன.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: “ஆந்திராவில் 11 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளை கொண்டு இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் போட்டியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும்” என்றார்.
இதையடுத்து அமைச்சர் ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது, எதிர்த்து விளையாடியவர் முகத்தில் ஒரு குத்து விட்டார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.