இந்த வீடுகள் வாடகைக்கு கிடைக்கும்: அமைச்சர் முத்துசாமி தகவல்..!

சென்னையில், விற்பனையாகாத வீட்டு வசதி வாரிய வீடுகளை வாடகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் நடைபெறும் திட்டப்பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இப்பகுதியில் முதலில் 62 வீடுகள் இருந்தன. இந்த வீடுகள் மிக மோசமாக பழுதடைந்திருந்ததால், அவை அகற்றப்பட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 96 சென்ட் நிலத்தில், 102 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இன்னும் 10 சதவீத பணிகள் மீதமுள்ளன. மிக விரைவாக முடிக்க கேட்டுக் கொள்ளப்பட்டு, ஒப்பந்ததாரர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். 102 வீடுகளும் தற்போது விற்கப்பட்டுவிட்டன. வாங்கியவர்கள் கூறும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு 1.48 லட்சம் சதுரடி பரப்பில், 1,192 முதல் 1,542 சதுர அடி வரையில் வீடுகள் உள்ளன. சதுர அடி ரூ.9,892-க்கு விற்கப்படுகிறது. ஒரு வீடு ரூ.1.38 கோடி முதல், ரூ.1.52 கோடி வரை வருகிறது.

வீட்டுவசதி வாரியம் சார்பில் 135 இடங்களில் வாடகை குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 61 இடங்களில் வாடகை குடியிருப்புகள் பழுதடைந்திருந்ததாக தகவல் வந்தது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுவசதி வாரிய இடங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வரும் காலங்களில் வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்படும் வீடுகள் மக்களின் தேவையை அறிந்து கட்டப்படும். இதன் மூலம் வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளது என்ற நிலை மாற்றப்படும். விற்பனையாகாத வீடுகளில் வாடகை குடியிருப்புகளாக மாற்றப்பட்டு வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் 1800 வாடகை குடியிருப்புகள் விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன.

நெல்லை, புதுக்கோட்டையில் காலிமனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிலம் அதிக அளவில் இருப்பவர்களிடம் இருந்து விருப்ப அடிப்படையில் இணைந்து செயல்படும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிலம் மேம்பாட்டுப்பணிகளை வீட்டுவசதி வாரியம் செயல்படுத்தும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.