உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியாவுக்கு அயோத்தி – டெல்லி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த பெண் பயணியின் செல்போனை திருடியுள்ளார். தனது மொபைல் காணாமல் போனதாக பெண் கூறியதையடுத்து, அங்கிருந்தவர்கள் அதனை தேடியுள்ளனர்.
அப்போது, ஒரு இளைஞரிடம் அந்த செல்போன் இருந்ததையடுத்து, அங்கிருந்த பயணிகள் இளைஞரை அடித்து உதைத்து இழுத்துச் சென்று ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். இதில், தில்கார் ரயில் நிலையம் அருகே, ரயில் கம்பத்தின் மீது அந்த நபரின் தலை மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சில பயணிகள் அந்த நபரை இரக்கமின்றி அடிப்பதைக் காணலாம்.
இது தொடர்பாக, இளைஞரை ரயிலிலிருந்து தள்ளிய நரேந்திர துபே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இளைஞரை அடித்து உதைத்து, அவர் கெஞ்சி கேட்டும் ரெயிலிருந்து தள்ளும் விடியோவை ஆதாரமாக வைத்து குற்றவாளி நரேந்திர துபே கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.