
எக்ஸ்னோரா முன்னாள் தலைவர் சுலோச்சனா ராமசேஷன் நேற்று மாலை கனடாவில் காலமானார். அவருக்கு வயது 89. அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியில் தொண்டு மற்றும் கல்வி சேவையில் சிறந்து விளங்கிய புகழ்பெற்ற ராமசேஷ ஐயர் குடும்பத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா ராமசேஷன். தனது கணவர் மறைவுக்குப் பிறகு, தனது மகளுடன் கனடாவில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக நேற்று மாலை உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்குகனடாவில் இன்று நடைபெறுகிறது.

அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எக்ஸ்னோரா அமைப்பின் தலைவராக 25 ஆண்டுகள் தொண்டாற்றி, கனடாவில் தனது மகளுடன் வசித்து வந்த சுலோச்சனா ராமசேஷன் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியில் சமூகத் தொண்டுக்குப் புகழ்பெற்ற ராமசேஷன் குடும்பத்தைச் சேர்ந்த சுலோச்சனா அவர்கள் தாமும் சமூகப் பணிக்காக வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார். சென்னையில் 550 கிளைகளையும், தமிழகம் முழுவதும் 1300 கிளைகளையும் கொண்டிருக்கும் எக்ஸ்னோரா அமைப்பின் வளர்ச்சியில் சுலோச்சனா அம்மையாரின் பங்கு அளப்பரியது.

குறிப்பாக, நரிக்குறவ மக்களின் நலனுக்காகத் தமது கணவர் ராமசேஷனுடன் இணைந்து சுலோச்சனா அம்மையார் ஆற்றிய பணிகள் ஏராளம். பசுமைப் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவை பற்றிய விழிப்புணர்வுக்காகவும் அவர் பல பணிகளை மேற்கொண்டார். பிறர்க்காகவே வாழ்ந்து மறைந்த சுலோச்சனா ராமசேஷனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எக்ஸ்னோரா குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.