2023-ம் ஆண்டுக்குள் குரூப்-4 தேர்வு: திருமாவளவன் வலியுறுத்தல்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுகளை 2023-ம் ஆண்டுக்குள் நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தினை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில், அனைத்து போட்டித் தேர்வுகளும் துறை சார்ந்த தேர்வுகளாக அமைந்துள்ளன.

மேலும், லட்சக்கணக்கான தேர்வர்கள் பங்கேற்கும் குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான தேர்வு 2024-ம் ஆண்டு தான் நடைபெறும் என்கிற சூழல் உருவாகி உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் பெரும்பாலான இளைஞர்கள் போட்டித் தேர்வினை எழுத தயாரான சூழலில், சமீபத்தில் வெளி வந்துள்ள ஆண்டுத்திட்ட அறிக்கை அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த ஆண்டுத்திட்டம் போட்டித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகளுக்கு தயார் செய்யும் நிலையிலிருந்து விலகிச் செல்ல வழி வகுக்கும். இதன் காரணமாக வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அத்துடன், யு.பி.எஸ்.சி. மற்றும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின தேர்வர்களுக்கு அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் நிதி கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.

எனவே, தாட்கோ மூலம் வழங்கப்படும் உதவித் தொகையை விரைந்து வழங்கிட வேண்டும். குரூப்-1, 2 மற்றும் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதத்தில் நடத்த வேண்டும். மேலும், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின மக்களுக்கான நிரப்பப்படாத பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.