பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தனி கவனம் – நிர்மலா சீதாராமன்

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவினத்துக்கு ஒப்புதல் கோரி, மத்திய அரசு துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதற்கு மக்களவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது. மாநிலங்களவையில் நேற்று துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

அப்போது பேசிய அவர், எரிபொருள் விலை, உரம் விலை போன்ற வெளியுலக காரணங்களால், பணவீக்கம் அதிகரிக்கிறது என்றார். இருப்பினும், மொத்தவிலை பணவீக்கம் கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. 6 சதவீதத்துக்கு மேல் இருந்த சில்லரை விலை பணவீக்கம், கடந்த நவம்பர் மாதத்தில் 5.88 சதவீதமாக குறைந்துள்ளது என்றார்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக கூறிய அவர், உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை போன்ற கொள்கைகளால், தனியார் மூலதன செலவு அதிகரித்து வருகிறது என்றார். வரிவசூலில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், துணை மானிய கோரிக்கையில் கோரப்பட்ட தொகையை திரட்ட முடியும் என்று கூறினார்.

வங்கிகளின் மொத்த வாராக்கடன்கள், 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக 5.9 சதவீதமாக குறைந்துள்ளது என்று அமைச்சர் கூறினார். கொரோனாவை எதிர்கொண்ட மத்திய அரசின் அணுகுமுறையால், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.

பின்னர், துணை மானிய கோரிக்கைக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்து, மக்களவைக்கு திருப்பி அனுப்பியது. அதன்மூலம், இரு அவைகளின் ஒப்புதலை பெறும் நடைமுறை நிறைவடைந்தது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.