புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்எல்ஏவும், சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேத்தியுமான முக்தா திலக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 57.
மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கு புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் முக்தா திலக். பாஜக எம்எல்ஏவான இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சமீபத்தில் நோய் பாதிப்பு அதிகமானது. 10 நாட்களுக்கு முன்பு, புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் உயிரிழந்தார்.
மரணம் அடைந்த முக்தா திலக் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்காக சிசிச்சை பெற்றுக் கொண்டே கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறை எம்எல்ஏவான இவர், புனே நகர மேயர் பதவியும் வகித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேத்தி ஆவார். முக்தா திலக்கிற்கு கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நாக்பூரில் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், பெண் எம்எல்ஏ முக்தா திலக் மரணம் அடைந்த தகவல் சட்டசபையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக சட்டசபையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.