முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கோபிந்தா சந்திர தாஸ் காலமானார். அவருக்கு வயது 96.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் ஜவகர்லால் நேரு. இவர், 1964-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒடிசாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, ஜவஹர்லால் நேருவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, அப்போது ஒடிசா கவர்னரின் தனி டாக்டராக இருந்த கோபிந்தா சந்திர தாஸ், பிரதமர் நேருவுக்கு சிகிச்சை அளித்தார். அவருடைய ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த 6 நாட்களுக்கு அனைத்து நிகழ்ச்சியையும் ரத்து செய்த நேரு, தொடர் ஓய்வு எடுத்தார். அதன்பின், 1964 மே 27-ம் தேதி நேரு காலமானார்.
இந்த நிலையில், நேருவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கோபிந்தா சந்திர தாஸ் நேற்று உயிரிழந்தார். 96 வயதான கோபிந்தா வயது முதர்வு காரணமாக காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். டாக்டர் கோபிந்தா மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்தனர்.