மஞ்சப்பை விருது பெற அழைக்கிறார் மாவட்ட கலெக்டர்..!

மஞ்சப்பை விருது பெற பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கடந்த சட்டசபை கூட்டத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அப்போது அவர், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வதை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றும், தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். இந்த விருது பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3-ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் http://madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

இந்த படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர் அல்லது நிறுவன தலைவரால் கையொப்பம் இடப்பட்டு இருக்க வேண்டும். இந்த கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (சிடி) பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை வருகிற மே மாதம் 1-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.