
கடந்த ஜூலை 11-ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு நிர்வாகிகளும் அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கப்பட்டார். இதையடுத்து அந்தப் பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என கூறும் ஓ.பன்னீர்செல்வம், ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று காலை தலைமை கழகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், பன்னீர்செல்வம் அணிக்கு போனவர்கள் மீண்டும் இணைக்க கூடாது. பழையன கழிந்தால் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க இருக்கட்டும். பன்னீர்செல்வம் அணியை மட்டுமின்றி அந்த அணிக்குப்போனவர்களையும் மீண்டும் இணைக்ககூடாது என கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம்; அரசியலில் போலி ஓ.பி.எஸ். கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும் என கூறினார். சட்டசபை தேர்தலை போல நாடாளுமன்ற தேர்தலையும் உங்கள் தலைமையில் எதிர்கொள்ள தயார் என அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டாக வலியுறுத்தினர்.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, மக்களவை தேர்தலுக்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும். மக்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.வாக்குசாவடி அளவில் அதிமுகவை வலுப்படுத்த வேண்டும். ஓபிஎஸ் பண்த்தை கொடுத்து கூட்டத்தை கூட்டி உள்ளார். திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார். கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்து கொள்ளும். எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக முடிவு செய்யும். அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். அதிமுகவை பாஜக எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தியதில்லை. இதை செய்யுங்கள் அதை செய்யுங்கள் என எப்போதும் பாஜக வற்புறுத்தியதில்லை. தொண்டர்களும், நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது என கூறினார்.