
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்காவை அடுத்த வடசேரிகோணம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ். இவரது மகள் சங்கீதா (17). கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் சங்கீதாவும், பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த கோபு (20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே, காதலர்களுக்கு இடையே சிறுசிறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. தனது காதலி வேறு யாருடனாவது பழகுகிறாரா? என்பதை அறிய வேண்டும் என்று எண்ணிய கோபு, கொடூர திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதன்படி கோபு, சமூகவலைதளத்தில் ‘அகில்’ என்ற பெயரில் போலியாக கணக்கு ஒன்றை உருவாகியுள்ளார்.

பின்னர் கோபு, அகில் பெயரில் சங்கீதாவுடன் சமூகவலைதளத்தில் நட்பாக பேசியுள்ளார். தனது காதலன் தான் அகில் என்ற பெயரில் தன்னுடன் பேசுகிறார் என்பதை அறியாத சங்கீதா தொடர்ந்து பேசி வந்துள்ளார். தனது காதலி, தான் உருவாக்கிய பேக் ஐடியில் வேறொரு நபருடன் பேசுவதால் ஆத்திரமடைந்த கோபு, தனது காதலி சங்கீதா துரோகம் செய்வதாக நினைத்துள்ளார்.
இந்நிலையில், உன்னை சந்திக்க இன்று இரவு 1.30 மணிக்கு உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று சங்கீதாவிடம் ‘பேக் ஐடி’ அகில் (கோபு) கூறியுள்ளார். இதை நம்பிய சங்கீதா நள்ளிரவு 1.30 மணியளவில் தனது வீட்டு வாசலுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு ஹெல்மெட் அணிந்தவாறு கோபு வந்துள்ளார். தன்னுடன் ஆன்லைனில் பேசிய அகில் தான் வந்துள்ளார் என்று எண்ணிய சங்கீதா ஹெல்மெட்டை கழற்றுமாறு கூறியுள்ளார். ஆனால், ஹெல்மெட் அணிந்து வந்தது கோபு போல் உள்ளதை அறிந்த சங்கீதா ஹெல்மெட்டை கழற்றுமாறு கூறியுள்ளார்.

அப்போது, தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை கொண்டு கோபு தனது காதலி சங்கீதாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றார். சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். அப்போது, சங்கீதா ரத்த வெள்ளத்தில் வீட்டு வாசலிலேயே சுருண்டு விழுந்தார்.
அவரை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால், சங்கீதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபுவை கைது செய்தனர்.