வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது.
மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தியா தொடரை நடத்தும் அணியாக பங்கேற்கிறது. ஏற்கனவே, கடந்த 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல்ஸ் அணிகளுடன் ‘டி’ பிரிவில் இந்தியா உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஹர்மன்ப்ரீத் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியை காண ஒடிசா மாநிலத்திற்கு மதிப்பிற்குரிய விருந்தினராக வருகை தர வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒடிசா மாநில முதல்வரி நவீன் பட்னாயக் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் எழுதிய கடிதத்தை அம்மாநில அமைச்சர் அடானு சப்யசாசி நாயக் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்கினார். இந்த சந்திப்பின் போது தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.