திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் நேருதாசன். இவரது மனைவி லதா. இந்த தம்பதிக்கு ஆகாஷ் (27) மற்றும் ஆதவன்(24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் ஆகாஷ் வாலிபால் விளையாட்டு வீரர். சிறுவயது முதல் விளையாட்டில் ஆர்வத்துடன் இருந்த அவர், பொறியியல் பட்டப்படிப்பு படித்து விட்டு வாலிபால் ஆர்வத்தால் அம்பத்தூரில் உடற்கல்வி ஆசிரியராகவும் பணி புரிந்து வந்துள்ளார். தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி பல பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தான், ஈரோட்டில் உள்ள யூத் ஸ்போர்ட்ஸ் ப்ரமோஷன் அசோசியேசன் என்ற அமைப்பு மூலம் கடந்த 21-ம் தேதி நேபாளத்தில் உள்ள போக்ரா நகரத்தில் ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற வாலிபால் போட்டியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். நேற்று முன்தினம் (டிச. 25) காலை 11.00 மணியளவில் நடைபெற்ற விளையாட்டில் முதல் சுற்றில் வெற்றி பெற்று ஓய்வு எடுக்க சென்றுள்ளார்.
பின்னர் ஓய்வு அறையில் ரத்தவாந்தி எடுத்து மயக்கம் அடைந்த ஆகாஷை சக விளையாட்டு வீரர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆகாஷின் பெற்றோருக்கு பயிற்சியாளர் நாகராஜன் தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து செய்வதறியாத தவித்தனர். மேலும் நேபாளம் நாட்டில் உயிரிழந்த மகனின் உடலை கொண்டு வருவதில் சிரமம் இருப்பதால், ஆகாஷின் உறவினர்கள் மற்றும் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனு ஒன்றை அளித்தனர். மகனின் இறப்பு செய்தியை கேட்ட பெற்றோர் கண்கலங்கி நிற்கின்றனர். உடல் நலத்துடன் சென்று விளையாட்டில் சாதித்து விட்டு வருவதாக கூறி சென்ற தம் மகன் இறந்து விட்டார் என்ற செய்தி நம்ப முடியவில்லை எனவும், மகனது இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆகாஷின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு உரிய முறையில் விசாரித்து தமது மகனின் சடலத்தை எடுத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைக்கின்றனர். சாதித்து விட்டு வருவதாக கூறி சென்ற மகன் சடலமாகி விட்ட செய்தி கேட்டு ஆகாஷின் பெற்றோர் மட்டுமின்றி கைவண்டூர் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.