முகக் கவசம் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு..!

சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் 100 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சீனாவில் இருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்தவர்களுக்கு நேற்று ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டத்தில், 36 வயது பெண்ணுக்கும், ஒரு குழந்தைக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2 பேருக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. சுகாதார ஆய்வாளர் ஒருவர் இவர்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த 2 பேரையும் வீட்டில் விட்டுச் சென்றவர் காரில் சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறார். அவர் திரும்ப அழைக்கப்பட்டார். அவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க சொல்லியுள்ளோம்.

தொற்று உறுதியானவர்களின் மாதிரிகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் முடிவுகள் 4 அல்லது 5 நாட்களில் கிடைக்கும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கிருமிநாசினியை பயன்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.