மெயின் அருவியில் குளிக்கத் தடை: ஐந்தருவிக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்..!

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கபட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் அங்கு சென்று நீராடிச் செல்கின்றனர்.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து, இரண்டாவது நாளாக நேற்று வரை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று மாலையில் குற்றாலம் மெயின் அருவியிலும், பழைய குற்றாலம் அருவியிலும் காட்டாற்று வெள்ளம் உருவாகியது.

மேலும், பழைய குற்றாலம் அருவியில் கொட்டிய நீரில் வனப்பகுதியில் இருந்து உடும்பு வெள்ளத்தில் அடித்துவரப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறை ஊழியர் உடும்பை பத்திரமாக மீட்டார். மேற்கு தொடர்ச்சிமலை வனப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டி வருகின்றது.

இதன் காரணமாக 3-வது நாளாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கபட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் அங்கு சென்று நீராடி சென்றவண்ணம் உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.