வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றது. அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கட்சியினரை நேரில் சந்தித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
அதன்படி, தமிழ்நாட்டில் இன்று நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஜே.பி. நட்டா தொடங்கி வைத்து பிரசாரத்தை தொடங்கினார். முன்னதாக கோவை விமான நிலையத்திற்கு வந்த அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் நேரில் சென்று வரவேற்றனர்.
இதனையடுத்து கோவை மாவட்டம் காரமடை அருகே தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் நடந்த வாஜ்பாய் பிறந்தநாள் நல்லாட்சி தின பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா முன்னோக்கிச் சென்று ஒரு பெரிய பாய்ச்சலை எடுத்து வருகிறது. இந்தியா இப்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது. இந்தியா தற்போது வலிமையுடன் முன்னேறி வருகிறது, விரைவில் உலகின் தலைசிறந்த தலைமையாக மாறும்.
நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும். நம்பிக்கையான முன்னேற்றத்தை பார்த்துக் கொண்டே இருக்கின்றோம். யாரும் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதற்காக அன்னை யோஜனா திட்டத்தைக் கொண்டு வந்தோம். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகளை உலகம் வியந்து பாராட்டியுள்ளது” என்று தெரிவித்தார்.