15,149 காலிப் பணியிடங்கள்: வெளியானது டிஆர்பி தேர்வு அட்டவணை..!

தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.

இந்நிலையில், 2023-ம் ஆண்டு நடத்தப்படவுள்ள தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், மொத்தம் 15,149 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்படும் 9 தேர்வுகள் குறித்த திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியருக்கான 4,000 காலிப் பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான 6,553 காலிப் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும் என்றும், இதற்கான அறிவிப்பாணை மார்ச் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3,587 காலிப் பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தாள் 1 மற்றும் தாள் 2, 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்றும், இத்தேர்வு குறித்த அறிவிப்பு 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.