கர்நாடக மேல்-சபையில் நேற்று, காங்கிரஸ் உறுப்பினர் நசீர் அகமது கேட்ட கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி பதிலளிக்கையில், “18 வயது வரை உள்ளவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பு முழுமையாக தேவைப்படுகிறது. குழந்தைகளை வளர்க்க அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்கப்படுகிறது.
குழந்தைகள் 18 வயதை அடைவதற்குள் எப்போது வேண்டுமானாலும் அந்த விடுமுறையை எடுத்து கொள்ளலாம். பொதுவாக, பெண்கள் தான் குழந்தை வளர்ப்பில் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்பதால் பெண் ஊழியர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. ஆண் ஊழியர்களுக்கு இந்த விடுமுறை வழங்கும் திட்டம் இல்லை.
விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கேட்க முடியுமா..?. குழந்தைகளை வளர்க்க விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பெண் ஊழியர்கள், தங்களின் மகன் மற்றும் மகள் பொது நுழைவுத் தேர்வு எழுதும்போது அவர்களுக்கு உதவ அந்த விடுமுறையை எடுக்கிறார்கள்.
ஒருவேளை மனைவி இறந்துவிட்டால், அத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளை வளர்க்க ஆண் ஊழியர்களுக்கும் இந்த குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று மாதுசாமி கூறினார்.