கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை..!!

சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் பி.எப்.7 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டின் 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய திருத்தப்பட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பானில் இருந்து வருவோர் அங்கு விமான நிலையத்தில் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, பழைய வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 விமான நிலையங்களுக்கும் வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசி தவணைகளை நிறைவு செய்திருக்க வேண்டும் எனவும், தொற்று அறிகுறிகளுடன் வரும் பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும், ரேண்டமாக 2 சதவீதம் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது ஏதேனும் அறிகுறி இருப்பின் 104 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள மருத்துவ நிலையத்திலோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை இல்லை என்றாலும், அறிகுறிகள் இருந்தால் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் படி சிகிச்சையளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.