கோவையில், அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 100 மீட்டர் தூரம் இழுத்துச்செல்லப்பட்ட கணவன் – மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). இவருடைய மனைவி தேவி(33). இவர்களுக்கு தர்னிஷ், வாசுலேகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவி 2 பேரும், பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இவர்கள் நேற்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுச் சென்றனர். சைக்கிளை ராஜேந்திரன் ஓட்டினார். ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன், தேவி ஆகியோர் சாலையில் விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.
இதை கவனிக்காமல் டிரைவர் தொடர்ந்து பஸ்சை ஓட்டிச் சென்றார். இதனால் அவர்கள் பஸ் சக்கரத்தில் சிக்கினர். இதன் காரணமாக உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அவர்களது உடல்கள் அப்படியே சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டன. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர். உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார்.
இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திய டிரைவரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த குபேந்திரன்(38), அரசு பேருந்துடன் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.