பெங்களூரு அம்ருதஹள்ளி பகுதியில் அமைந்துள்ள லட்சுமி நாராயணா என்ற கோவிலுக்கு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த மாதம் 12ஆம் தேதி கோவிலுக்கு சாமி கும்பிட பட்டியலின பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அந்த கோவிலின் பூசாரியான முனிகிருஷ்ணா என்பவர், நீங்கள் எல்லாம் இந்து கோவிலுக்குள் வரக்கூடாது என கூறியுள்ளார்.
அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முனிகிருஷ்ணா அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து தரதரவென கோவிலுக்கு வெளியே இழுத்து வந்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இந்த சம்பவம் வெளிவந்துள்ளது.
மேலும் இது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதன் பின்னர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து, முனி கிருஷ்ணாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
newstm.in