கேரளாவில் இன்று நடந்த சாலை விபத்தில் மாநில உள்துறை செயலர், அவருடைய மனைவி, மகன் மற்றும் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தனர்.
கேரள மாநில உள்துறை செயலராக இருப்பவர் வேணு. இவர், தனது மனைவி சாரதா முரளீதரன், மகன் ஆகியோருடன் இன்று காரில் சென்று கொண்டிருந்தார். அவர்களது கார் காயம்குளம் பகுதியில் சென்றபோது, லாரி ஒன்று அதன் மீது மோதியது.
இந்த விபத்தில் வேணு, அவருடைய மனைவி, மகன் மற்றும் கார் ஓட்டுனர் ஆகியோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, பருமலா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பின்பு உடல்நலம் தேறி வருகின்றனர் என காயம்குளம் போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.