மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

தமிழக மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (10-ம் தேதி) வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இந்த போராட்டத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கே எம் விஜயன் மற்றும் மனோகரன் ஆகியோர், “தொழில் தகராறு சட்டத்தின்படி, சமரச பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு, வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க முடியாது. எனவே, இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். சட்டத்தின்படி வேலை நிறுத்த போராட்டத்திற்கு 6 வாரங்கள் முன்கூட்டியே அறிவிக்கையானது வெளியிடப்படவில்லை” என்று வாதிட்டனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “மின் வாரிய ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக இன்று காலை பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை கடந்த 5-ம் தேதியே அனுப்பிய போதும் வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தது சட்டவிரோதமானது. மேலும், மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், ஆவின் பால் வினியோகம், மருத்துவமனை செயல்பாடுகள், பள்ளி, கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கும். எனவே, இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மின் வாரிய ஊழியர்கள் தொழிற்சங்கம் நாளை (ஜன.10) அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்கக் கூடும். பேச்சுவார்த்தை நடைபெறும் நேரத்தில் அதன் முடிவுகளை தெரிந்து கொள்ளும் முன் வேலை நிறுத்தம் செய்வது சட்டவிரோதமானது எனக் கூறி, வேலை நிறுத்ததுக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அரசு தரப்புக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.