பெங்களூரு மெட்ரோ ரயில் தூண் விபத்து: 3 பொறியாளர்கள் பணியிடை நீக்கம், 9 பேர் மீது வழக்குப் பதிவு

பெங்களூரு: பெங்களூருவில் மெட்ரோ ரயில் தூண் சரிந்ததால் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கட்டுமான நிறுவனம் உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இரண்டாம் கட்ட (Phase 2B) மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நகவாரா என்ற இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மெட்ரோ ரயில் பில்லர் சரிந்து விழுந்ததில், சாலையில் சென்றுகொண்டிருந்த 35 வயது தேஜஸ்வினி என்ற பெண்ணும், அவரது 2 வயது மகனும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தேஜஸ்வினியின் கணவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விபத்துக்குக் காரணமான மூன்று பொறியாளர்களை பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷன் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும், விபத்து குறித்து விளக்கம் அளிக்க ஒப்பந்ததாரரான நாகர்ஜூனா கட்டுமான நிறுவனத்திற்கு அது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், விபத்து நிகழ்ந்த பகுதியில் 12 மீட்டர் உயரத்திற்கும் மேலான பில்லர்களை அமைக்கும் பணிக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷன் நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.

இதனிடையே, இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோவிந்தபுரா காவல் நிலையம், நாகர்ஜூனா கட்டுமான நிறுவனம் உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. முதல் குற்றவாளியாக நாகார்ஜூன கட்டுமான நிறுவனமும், இரண்டாவது முதல் 9-வது குற்றவாளி வரை பெங்களூரு மெட்ரோ ரயில் கார்பரேஷன் நிறுவன பொறியாளர்கள், அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். கர்நாடக உள்துறை அமைச்சர் மகேஷ் பெந்தேகரி இதனைத் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு ஆஜராகுமாறு இவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.