திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருங்கல்மேடு பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரமூர்த்தி. இவரது மனைவி ரத்தினாள் என்கின்ற ரஞ்சிதம் (26). இருவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் இனியன் என்ற மகன் உள்ளான். இனியனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் ரத்தினாள் மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற ரஞ்சிதம் வீடு திரும்பவில்லை. இதனால் தனது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என குன்னத்தூர் காவல் நிலையத்தில் ஈஸ்வரமூர்த்தி புகார் அளித்தார். மேலும் ஈஸ்வரமூர்த்தியும், அவருடைய உறவினர்களும் ரஞ்சிதத்தை தேடி வந்தனர்.
இதனிடையே கோபியை அடுத்த குருமந்தூர் கீழ்பவானி வாய்க்கால் கரை ஓரத்தில் ரஞ்சிதத்தின் செருப்பு மற்றும் துணிகள் இருந்ததை கண்டனர். இதையடுத்து ரஞ்சிதத்தையும், குழந்தை இனியனையும் கீழ்பவானி வாய்க்காலில் தேடி வந்த நிலையில் இனியனின் உடல் ஈரோட்டை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் நேற்று முன்தினம் மிதந்தது.
வெள்ளோடு போலீசார் விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் ரஞ்சிதத்தின் பிணம் கோபி அருகே உள்ள சின்னகுளம் கீழ்ப்பவானி வாய்க்காலில் மிதந்தது. இதுகுறித்து அறிந்ததும் கோபி போலீசார் விரைந்து சென்று ரஞ்சிதத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், மகன் இனியனுக்கு மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதாகக் கேட்ட தகவலால் மன வருத்தத்தில் இருந்த ரஞ்சிதம், குழந்தையுடன் வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ரஞ்சிதத்துக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆவதால் கோபி ஆர்.டி.ஓ.வும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.