
மராட்டிய துணை முதலமைச்சரின் மனைவி அரசு பங்களாவில் நடிகருடன் நடனம் ஆடி, வீடியோ எடுத்ததற்கு எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
மராட்டியத்தில், பா.ஜ.க. தலைவர் மற்றும் துணை முதல்-மந்திரியாக பதவி வகிப்பவர் தேவேந்திர பட்னாவிஸ். இவர் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ். இவருக்கு ஒய் பிரிவு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மீட் பிரதர்ஸ் சார்பில் இசையமைக்கப்பட்ட, மூட் பனா லியா என்ற பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு அவர், நடிகர் மற்றும் மாடலான ரியாஸ் அலி என்பவருடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். இந்த பாடலுக்கான அவரது நடன அசைவுகளை லட்சக்கணக்கானோர் பாராட்டி உள்ளனர்.
இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு உள்ளார். வீடியோ வெளியிட்ட சில நிமிடங்களில் லட்சக்கணக்கானோர் அதனை பார்வையிட்டு, லைக் செய்து உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இதனை வரவேற்று விமர்சனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஹேமா பிம்பிள் அரசு பங்களாவில் நடனமாட அம்ருதா முறைப்படி அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வ அனுமதி வாங்கியுள்ளாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்ருதாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வசதி அளித்து இருப்பதே சட்டவிரோதம். அரசியல் சாசன பதவி வகிக்கும் ஒருவருக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு வசதி அளிக்கப்படும். அரசின் துஷ்பிரயோகத்தினால், அம்ருதா பட்னாவிசுக்கு இந்த வகையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது என அவர் கடுமையாக சாடியுள்ளார்.
newstm.in