
இளைஞர்களே, கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். வாழ்க்கையில் முன்னேற உங்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டே இருப்பது அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில், அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.
)
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), ரயில்வே தேர்வு வாரியம், அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) போன்றவைகள் மூலம் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை இரண்டு கட்டங்களாக சுமார் 1.47 லட்சம் பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக நாடு முழுவதும் சுமார் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: “ரோஸ்கர் மேளா என்பது நல்லாட்சியின் அடையாளமாக மாறி உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு இருக்கும் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்று. இன்று பணி நியமனக் கடிதம் பெற்றவர்களுக்கு இது ஒரு புதிய வாழ்க்கைப் பயணம். அரசாங்கத்தின் முக்கிய அங்கமாக இருப்பதால், வளர்ந்த இந்தியாவின் பயணத்தில் நீங்கள் தீவிரமாக பங்கேற்பீர்கள். நுகர்வோர் சொன்னால் அதுதான் சரி (The consumer is always right) என வணிக உலகில் கூறப்படுவது உண்டு.

அதுபோல், நாட்டு மக்கள் சொன்னால் அதுதான் சரி(Citizen is always right) என்பதே ஆட்சியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இளைஞர்கள் கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். வாழ்க்கையில் முன்னேற உங்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டே இருப்பது அவசியம். புதிய வேலைவாய்ப்புகளையும், சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்குவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். வாழ்க்கையில் முன்னேற உங்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டே இருப்பது அவசியம்” இவ்வாறு அவர் கூறினார்.