குஜராத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தியன் ரயில்வே பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏ.சி. சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தவுள்ளது. ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத் என்ற திட்டத்தின் கீழ், அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த சுற்றுலா ரயில் தனது முதல் சுற்றுப்பயணத்தை வருகிற 28-ம் தேதியன்று டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்குகிறது.
முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏ.சி.யுடன் 8 நாள் சுற்றுப்பயணத்தை இந்த அதிநவீன பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏ.சி. சுற்றுலா ரயில், மேற்கொள்ள உள்ளது. இந்த ரயிலில் நான்கு முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள், ஒரு பேண்ட்ரி மற்றும் இரண்டு ரயில் உணவகங்கள் உள்ளன.
ஒரே நேரத்தில் குறைந்தது 156 பயணிக்கும் வகையில் இந்த ரயில் அமைந்துள்ளது. குஜராத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த சுற்றுலா ரயில், குஜராத்தின் முக்கிய புனித யாத்திரைகள் மற்றும் பாரம்பரிய தளங்களுக்கு பயணிக்க உள்ளது. ஒற்றுமை சிலை, சம்பானேர், சோம்நாத், துவாரகா, நாகேஷ்வர், பெய்ட் துவாரகா, அகமதாபாத், மோதேரா மற்றும் படான் ஆகிய இடங்களுக்கு செல்கிறது. குருகிராம், ரேவாரி, ரிங்காஸ், புல்லேரா மற்றும் அஜ்மீர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.