“மக்களை குடிக்க வைப்பது திராவிட மாடல் அரசா?” : சீமான் காட்டம்!!

மக்களை குடிக்க வைப்பதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு நடத்துகின்ற மதுக்கடைகள் 24 மணி நேரமும் இயங்குவதாக உயர்நீதிமன்றமே கண்டிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்லார்.

மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கொன்றில் மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என்று அரசு அறிவித்திருந்த போதிலும் உண்மையில் தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் மதுவிற்பனை நடைபெறுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு மறுக்காதது அதிர்ச்சியளிக்கிறது.

மதுவிற்பனையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது என்று நீதிபதிகளே குற்றம் கூறும் அளவிற்கு தமிழ்நாட்டில் நாள்தோறும் மிகப்பெரிய சமூக அவலம் நிகழ்கிறது. மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாமல் தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்ற நீதியரசர்களின் கேள்விக்கும் தமிழ்நாடு அரசிடம் உரிய பதில் இல்லை என்பதுதான் பெருங்கொடுமை.

அதிகாலை 6 மணிக்கே மதுக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை காண்பது, சாதாரண காட்சியாக கடந்துபோக முடியவில்லை. பள்ளிக் கல்லூரி மாணவர்களும், மாணவியர்களும் குடித்துவிட்டு சீருடையுடன் போதையில் தள்ளாடும் காணொளிகள் தமிழ்நாடு எந்த அளவுக்கு சீரழிந்துக்கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

இலக்கு வைத்து 24 மணி நேரமும் முழுவீச்சில் மதுவிற்பனை நடைபெறும் மாநிலத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும்? தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருப்பது அரசு நடத்துகின்ற மதுக்கடைகள்தான்.

ஆகவே, திமுக அரசு இனியாவது மக்கள் நலத்தில் அக்கறைகொண்டு மதுக்கடைகளையும், பார்களையும் 24 மணிநேரமும் இயங்கச்செய்யும் முயற்சியை கைவிட்டு, உடனடியாக மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.