வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளை கரையான்கள் தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையின் பாதுகாப்பு பெட்டகத்தில் ரூபாய் நோட்டுகள், ஏராளமான ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்து.
அதில் பாதுகாப்பு பெட்டக எண் 265இல் சுனிதா மேத்தா என்பவர் 2.15 லட்சம் ரூபாய் நோட்டுகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை வைத்திருந்தார். அவருக்கு சமீபத்தில் பணத்தேவை ஏற்பட்டதால் லாக்கரில் உள்ள பணத்தை எடுக்கலாம் என வங்கிக்கு சென்றுள்ளார்.
ஊழியர்களிடம் கூறிவிட்டு தனது பாதுகாப்பு பெட்டகத்தை அவர் திறந்த போது அதிர்ச்சியில் உறைந்தார். பாதுகாப்பு பெட்டகத்தின் உள்ளே இருந்த பணம் மற்றும் சொத்து ஆவணங்களை கரையான்கள் அரித்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வங்கி ஊழியர்களிடம் புகார் தெரிவித்தார். அதன்பிறகு வங்கி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு முதற்கட்டமாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பெட்டகத்தில் பணம், பொருள் வைத்துள்ள பிறருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பிற வாடிக்கையாளர்கள் வந்து பார்த்த போது, வேறு சிலரின் உடமைகளும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஏற்பட்ட நிலையில், அனைவருக்கும் நஷ்டஈடு வழங்கப்படும் என வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
newstm.in