அளவுக்கு அதிகமாக சிக்கன் சாப்பிட்டதால் திண்டுக்கல்லில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கலிக்கம்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளியான வசந்தகுமார் (22) என்பவர் விடுமுறை தினமான நேற்று வீட்டில் சமைத்த சிக்கன் உணவை அதிக அளவு சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை பொறித்த மீன்களை சாப்பிட்டுள்ளார்.
பின்னர் அவருக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தந்தையிடம் கூறிய வசந்தகுமார், ஜீரணத்துக்காக குளிர்பானம் குடித்துவிட்டு சிறிது தூரம் நடந்து சென்றார்.
அதன்பிறகு ஊருக்கு வெளியே வசந்தகுமார் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வந்து பரிசோதித்த மருத்துவ ஊழியர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிக்கன் மற்றும் மீன் உணவை அதிகம் சாப்பிட்டதால் அவர் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in