எரிமலை உடனே வெடிக்காது புகைந்து கொண்டே இருக்கும். கடைசியில் வெடிக்கும் போது சேதாரம் பெரிதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்.
நமது அம்மா நாளிதழிலின் முன்னாள் ஆசிரியரும் ஓபிஎஸ்சின் ஆதரவாளருமான மருது அழகுராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக நிலவரம் குறித்து பேசினார். ”இரட்டை இலை சின்னம் ஒருபோதும் முடங்கி விடக்கூடாது என்பதற்காகத்தான் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தார் ஓபிஎஸ். ஆனால் இந்த பெருந்தன்மையே சிலர் கோழைத்தனம் என்று விமர்சிக்கின்றார்கள்” என்று வருத்தப்பட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் கடுமையான தண்டனையை கொடுப்பார்கள். அதே நேரம் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. இப்படி ஒரு குழப்பமான மனநிலைக்கு தொண்டர்கள் ஆளாகிவிட்டார்கள்.
தன் பெயரில் அதிமுகவை பட்டா போடுங்கள் என்று செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் வாழ்க்கை மிக விரைவில் முடிவுக்கு வரப் போகிறது . தொண்டர்களின் உரிமையை மீட்பதற்காகத்தான் ஓபிஎஸ் போராடி வருகிறார் என்று சொன்னவர், ஓபிஎஸ் பாணியில் மென்மைத்தனமும் அமைதியும் இருப்பதாக சிலர் கருதுகின்றார்கள்.
ஆனால் என்னை பொறுத்த வரைக்கும் எரிமலை உடனடியாக வெடிக்காது. புகைந்து கொண்டேதான் இருக்கும் . கடைசியில் வெடிக்கும் போது சேதாரம் பெரிதாக இருக்கும். அப்படித்தான் ஓபிஎஸ்-இன் அமைதி பல செய்திகளை சொல்கிறது என்றார்.
எடப்பாடி பழனிச்சாமியிடம் பொருளாதாரத்தை தவிர்த்து வேறு எதுவும் கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி அரசியல் தவறு என அவருடன் இருப்பவர்களே சொல்கின்றார்கள் என்று சொல்லும் மருது அழகுராஜ், அதிமுக பிளவு பட்டால் திமுக எளிதாக வெற்றி பெறும். இது வரலாற்றில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றார்.