மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் பொவாய் பகுதியில் மும்பை ஐ.ஐ.டி. செயல்பட்டு வருகிறது. இதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரை சேர்ந்த தர்சன் சொலாங்கி (18) என்ற மாணவர் சேர்ந்து உள்ளார். அவர், பி.டெக் இயந்திரவியல் பிரிவில் முதலாம் ஆண்டில் சேர்ந்து உள்ளார்.
ஐஐடியின் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், 7-வது மாடியில் இருந்து குதித்து தர்சன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அந்த வழியே சென்ற விடுதியின் பாதுகாவலர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஐ.ஐ.டி. வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தர்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மாணவர் தங்கியிருந்த விடுதி அறையில் தற்கொலை குறிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை.
இதனால், அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. தற்செயலான மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தர்சன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.