உலகம் எங்கும் இன்று (பிப். 14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சமீப காலமாக உலகின் அனைத்து இடங்களிலும் காதலர் தினம் ஒரு திருவிழாவைப் போல கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காதலர் தினத்தில் சிங்கிளாக இருப்பவர்களுக்கு பிரியாணி இலவசமாக வழங்கவுள்ளதாக அசாமில் உள்ள ஒரு உணவகம் விளம்பரம் செய்துள்ளது. தற்போது அந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் சில்சாரில் கானா கசானா என்ற உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம் காதலர் தினமான இன்று சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பிரியாணி வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக அந்த உணவகம் விளம்பரம் செய்துள்ளது.
இந்த விளம்பரத்தில், காதலர் தினத்தன்று சோகமாக இருக்க வேண்டாம் என்று உணவகம் ஆறுதல் கூறியுள்ளது. சில்சாரில் உள்ள உணவகம் அனைத்து ஒற்றையர்களுக்கும் பிரியாணியை இலவசமாக வழங்கும்.
இந்த முயற்சிக்கான நோக்கம் குறித்து உரிமையாளர் சிரஞ்சீவ் கோஸ்வாமி கூறுகையில், “ஆமாம், வரும் சிங்கிள்களுக்கு பிரியாணி இலவசம். சிங்கிள்களுக்கும் ஏதாவது ஆப்ஷன் இருக்கணும்” என்றார். மேலும், ஒருவர் தனிமையில் இருக்கிறாரா என்பதை அவர் எப்படிக் கண்டுபிடிப்பார் என்ற கேள்விக்கு, ஒருவர் ஜோடியா அல்லது தனிமையா என்பதை கண்டுபிடிக்க முடியாது, ஆனால் யாராவது உரிமையாளரை அணுகினால், அவர் அவர்களை பரிசீலித்து அவர்களுக்கு இலவச உணவு வழங்குவார் என்று கூறினார்.