ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்..!

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தின் கீழ், முதல் முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து கடந்த 1.2.2023 அன்று வேலூர் மாவட்டத்திற்கு சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சேலம் சென்றார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று, பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, முதியோர் ஓய்வூதியம், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் ஆகியவை குறித்து வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். அப்போது, முதல்வரிடம் பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, வாரிசு சான்றிதழ், ரேசன் கார்டு, முதியோர் ஓய்வூதியம் போன்றவை வழங்கிட வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகளும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட முதல்வர், மனுக்களுக்கு உரிய முறையில் விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து, சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 92.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.