
நீர் நிலைகளில் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் 2023-24ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடனான கலந்தாலோசனைக் கூட்டம் கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், தனியார் மருத்துவமனை நிறுவனர்கள், அரசு மருத்துவ பணியாளர்கள், அரசு மருத்துவத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு அவர்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

முன்னதாக இத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் இதற்கு முன்பு மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்தும் அமைச்சர் எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூட்டம் தொடர்பான முக்கிய சாராம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு பதில்களை தெரிவித்தார்.
அப்போது,கோழிக்கழிவுகள், மருத்துவக் கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டினால் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படுகிறது என்று பொதுமக்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.
newstm.in