கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் வாகமனில் வாகலாண்ட் எனும் ஓட்டலில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் சுற்றுலா வந்த மாணவர்கள் சிலர் இந்த ஓட்டலில் தங்கி இருந்துள்ளனர். இவர்களுக்கு இன்று காலை முட்டை மசாலாவும் தோசையும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு மாணவர்களின் முட்டையில் புழு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல சில மாணவர்கள் இந்த மசாலாவை சாப்பிட்டு மயக்கமடைந்து விழுந்துள்ளனர். இதனையடுத்து மயக்கமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மற்ற மாணவர்கள் ஓட்டல் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் மாணவர்களை தாக்க முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்னை பெரியதான நிலையில் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து ஓட்டலை பரிசோதித்துள்ளனர்.
சோதனையில் ஏற்கெனவே சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த ஓட்டல் ஏற்கெனவே இதேபோன்ற குற்றச்சாட்டில் சிக்கியிருந்தது. இதனையடுத்து இரண்டு முறை அதிகாரிகள் ஓட்டலுக்கு சீல் வைத்துள்ளனர். இருப்பினும் மீண்டும் மீண்டும் இதே போன்ற சம்பவத்தில் ஓட்டல் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் கேரளாவின் கோட்டயத்தில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடன் அதே ஓட்டலில் உணவு சாப்பிட்ட 21 பேர் உடல்நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதேபோல வாழத்தோப்பு பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவர் பரோட்டா சாப்பிட்டதால் உயிரிழந்தார். எர்ணாகுளத்தின் வடபரவூர் பகுதியில் உள்ள ஓட்டலில் உணவு சாப்பிட்ட 68 பேர் உணவு நஞ்சு காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்த நிலையில் அம்மாநிலத்தில் உணவு பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.