கல்வித் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்,தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்து கீழ்காணும் விவரங்கள் கோரப்படுகிறது.
நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள், நீண்ட காலமாக தகவலன்றி பணிக்கு வராதவர்கள், தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்கள்.(அடிக்கடி விடுப்பில் உள்ளவர்கள்).
மேற்காணும் விவரங்களை மிகவும் அவசரம் என கருதி இணையவழி ([email protected]) மூலம் உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலர் மெடிக்கல் லீவ் எடுக்கும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். உடல் நிலையை காரணம் காட்டி பலர் லாங் லீவ் எடுப்பதும் வழக்கம் ஆகி உள்ளது. இந்த நிலையில் பெற்றோர்கள், சக ஆசிரியர்கள் சார்பாக இவர்களை பற்றி பள்ளி கல்வித்துறைக்கு இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அதில் ஆசிரியர்களின் விடுப்பால் மாணவர்களின் படிப்பு கெடுகிறது. பாடத்திட்டம் முடிக்கப்படாத சூழல் நிலவுகிறது. அதனால் விரைவில் அடிக்கடி லீவ் எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்தே தொடக்க கல்வி இயக்ககம் ஆசிரியர்களின் விவரங்களை கேட்டுள்ளதாகவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அளிக்கும் பட்டியலின் அடிப்படையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.