தமிழ்நாட்டில் கட்டுமானப்பணிகள் முடிந்த பிறகு தான் மின் இணைப்பு, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு ஆகிய வசதி பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது இதற்கு தீர்வளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த மற்றும் கட்டிட விதிகள் 2019, விதி எண் 20-ன் படி கட்டிடங்களுக்கு கட்டுமான நிறைவு சான்று இன்றி மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வசதி உள்ளிட்டவற்றை வழங்கலாம் என அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மின்வாரியமும் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 மீட்டர் உயரம் வரை உள்ள 3 குடியிருப்புகள் அல்லது 750 சதுர மீட்டர் (8070 சதுர அடி) பரப்பளவிற்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும், இது போன்று அனைத்து தொழிற்சாலைகளுக்கும் இந்த வசதியை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவை அமல்படுத்துவதால், இனி வரக் கூடிய காலங்களில் கட்டிட முடிவு சான்று இல்லாமலேயே சொந்த்த வீடுகளோ, சொந்த தொழிற்சாலைகளுக்கும் அல்லது கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வசதியை வழங்கலாம் என மின்வாரியம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன் மூலமாக தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் கட்டக் கூடிய அனைத்து வீடுகள், தொழிற்சாலை கட்டிடங்கள் அனைத்திற்கும் மின் இணைப்பு வசதி, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வசதி பெற கட்டிட முடிவு சான்று கிடைக்கும் வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்வாரியமும் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும், பொறியாளர்களுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.