கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கண்ணிக்கரா பகுதியை சேர்ந்தவர் பிரணவ். இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் முதுகெலும்பில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக இவர் வீல் சேரில் முடங்கினார்.
இவரது வாழ்க்கை வீல் சேரில் முடக்கப்பட்டதற்கு பின்பும் தான் அனுபவித்து வரும் கஷ்டங்களை குறித்து கேரளா போக்குவரத்து துறையினர் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அனுபவத்தை எடுத்துக் கூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்துள்ளார்.
இதனிடையே திருவனந்தபுரம் மாவட்டத்தை சார்ந்த சஹானா என்ற பெண்ணுடன் இவருக்கு ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் குறித்து எல்லாம் தெரிந்த அந்த பெண் இவர் மீது ஆசை கொண்டுள்ளார். தன் நிலையை எடுத்துக்கூறி அந்த பெண்ணை விட்டு விலக முயன்றார். ஆனாலும் விடாத அந்த பெண் தனது வீட்டாரின் எதிர்ப்பை மீறி கடந்த வருடம் 2022-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி பிரணவை மணந்து கொண்டார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் பிரபலமாகி இருவரும் விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் தங்கள் காதல் குறித்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். இதனால் இருவரும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகிய ஜோடியாகவும் வலம் வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பிரணவ் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்பு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையிலும் அனுமதித்து உள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரணவ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்த ஜோடியை விரும்பும் இணையதளவாசிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.