
2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்த போது ரூ. 3 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்தார். அந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ. 300 கோடி செலவு செய்ததாக அறிவித்து இருக்கிறார்கள். ரூ.300 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இது தான் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் பொட்டல் காடாக காட்சி அளிக்கும் அந்த இடத்தின் படத்தை காட்டினார். மேலும் அங்கு இருந்தது ஒரே ஒரு செங்கல் தான். அதையும் நான் எடுத்து வந்து விட்டேன் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் செங்கலை காட்டினார். இதுதான் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் மதுரைக்கு கட்டிக் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறினார்.
இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது பிரச்சாரத்தின் போது தானும் ஒரு செங்கலை எடுத்து காட்டினார். அப்போது 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தர்மபுரியில் சிப்காட் அமைக்கப்படும் என்று கூறினீர்களே, 14 ஆண்டுகளாகியும் அங்கு ஒரு செங்கல்லை கூட காணவில்லை. எனவே இந்த ஒரு செங்கல்லை உதயநிதி ஸ்டாலினுக்கு பார்சல் அனுப்பி வைப்பேன் என்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் – பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செங்கல்லை காட்டி மாறி, மாறி பிரச்சாரம் செய்த காட்சிகள் தற்போது வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.