நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு 20%ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு நெல் பயிரிடப்படுகிறது. இந்நிலையில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
அதே போல் அறுத்து வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் நெல் மணிகள் ஈரமாயின. எனவே விவசாயிகள் தங்களின் நலனை கருத்தில் கொண்டு கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ஏற்கெனவே 19 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதலுக்கு அனுமதி உள்ள நிலையில், ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மத்திய அரசு நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in