வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.
இந்த வரதட்சணையால் பல கல்யாணங்கள் மணமேடைக்கு வந்து நின்று போய் கூட உள்ளது.இதே வரதட்சணையால் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன. ஏன் கல்யாணத்திற்கு பிறகு கூட இந்த வரதட்சணையால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன.இந்த வரதட்சணையால் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் தன் திருமணத்தில், அனைவருக்கும் முன்மாதிரியாக நடந்துகொண்டுள்ளார்.
ராஜஸ்தானில் வரதட்சணையாகக் கொடுத்த 11.50 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டு ஒரு தேங்காய் மற்றும் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்ட சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் மாவட்டம் ஹுடில் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரேம் சிங் ஷெகாவத்.இவர் தனது மகளை ராணுவ வீரர் அமர்சிங்கிற்கு திருமணம் செய்ய கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். திருமண ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்துகொண்டிருந்தன.
திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது பெண்ணின் தந்தை பிரேம் சிங் மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணைப் பணமாக ரூ. 11.50 லட்சத்தை மணமகனிடம் கொடுத்தார்.அதைப் பார்த்த மணமகன், ’நான் வரதட்சணை வாங்கமாட்டேன்’ என்று கூறி அதிலிருந்து ஒரு ரூபாயையும், ஒரு தேங்காயையும் மட்டும் எடுத்துக்கொண்டார்.
மணப்பெண்ணின் தந்தை கொடுத்த வரதட்சணை பணத்தை மணமகனின் தந்தை பன்வர் சிங் வாங்கி, மீண்டும் மணப்பெண்ணின் தந்தையிடம் திரும்ப கொடுத்தார். அதை வாங்கிய அவர் கண்கலங்கினார்.ரூ. 11.50 லட்சம் வரதட்சணையை மணமகன் திரும்பக் கொடுத்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியது. கிராம மக்கள் அனைவரும் அமர்சிங்கை பாராட்டினர்.
அமர் சிங் வீட்டில் மூன்று தலைமுறையாக ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அமர்சிங் உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவ வீரராக இருக்கிறார். அவரின் தாத்தா இந்தியா – பாகிஸ்தான் போரில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.